தமிழகத்தில் இன்று 3,827: சென்னையில் 70 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கடந்த 4 நாட்களைக் காட்டிலும் இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து இருக்கிறது.

கடந்த 4 நாட்களாக 4 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில் இன்று குறைந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 21 பேர் உட்பட மொத்தம் 3,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 33 ஆயிரத்து 518 பேர் உட்பட மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 937 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று 3 ஆயிரத்து 293 பேர் உட்பட மொத்தம் 66 ஆயிரத்து 571 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 61 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,571 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்று 1,747 பேர் உட்பட மொத்தம் 70 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மதுரையில் 245 பேருக்கும், செங்கல்பட்டில் 213 பேருக்கும் அதிகபட்சமாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share