Yகடும் நிதிச் சுமையில் தமிழக அரசு!

Published On:

| By Balaji

தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவரித்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 17) கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக 76.12 கோடி ரூபாய் மதிப்பிலான 14 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 4,642 பயனாளிகளுக்கு 53.71 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய முதல்வர், “அரசின் நிதி நிலைமை உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே கடுமையான நிதிச் சுமையில் அரசு இருந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் நமக்கு தொழில் துறை மிகவும் முக்கியமாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை வேளாண்மையும், ஜவுளித் தொழிலும்தான் பிரதானமாக இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் கருதி இரண்டு தொழில்களிலும் அரசு முழு கவனம் செலுத்தும். உங்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து, எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வோம் என்று உறுதியளித்தார்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கான செலவுகள் அதிகரிக்கும் அதே சமயம், ஊரடங்கால் தமிழக அரசின் வருமானமும் பெருமளவில் குறைந்துவிட்டது. ஏற்கனவே, ஊரடங்கு காரணமாக தமிழகம் 85,000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார். செலவுகளை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share