கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் 74 சதவிகித சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 80 சதவிகிதத்துக்கு மேல் வருவாய் இழப்பைச் சந்தித்து இருப்பதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 30 சதவிகிதம் பங்காற்றுகின்றன. இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிக அளவில் மகாராஷ்டிரத்திலும், அதற்கடுத்து பிகாரிலும், மூன்றாவதாகத் தமிழ்நாட்டிலும் உள்ளன.
அந்த வகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றன, ஊரடங்குக்குப் பிறகு நிறுவனங்கள் திறக்கப்படும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன, சலுகைகள் என்னென்ன வழங்க வேண்டும் என்பது குறித்து அடிப்படை ஆய்வுகளை சென்னை ஐஐடி மேற்கொண்டது.
தமிழகம் முழுவதும் சுமார் 1,200 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வு விவரங்களை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் 78 சதவிகிதம் நிறுவனங்கள் மூடப்பட்டுதான் இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் 79 சதவிகிதம் பெருமளவில் பாதிக்கப்பட்டவையாக உள்ளன.
சிறு, குறு நிறுவனங்களில் பொருட்களை வாங்குவோர் பாக்கித்தொகையை மிக தாமதமாக வழங்குவதால், தொழில்கள் முடங்குவதாக 41.38 சதவிகித நிறுவனங்களும், சரக்கு போக்குவரத்து முடங்கியிருப்பதால் தொழில்கள் நலிவடைந்து இருப்பதாக 27 சதவிகித நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
பணிக்குத் திரும்பாத ஊழியர்களின் உடல்நலக்குறைவு, சுகாதாரம் போன்ற காரணங்களும் தொழில்களை மிகவும் பாதித்து இருக்கின்றன. ஏற்கனவே நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு இருந்த ஆர்டர்களும் ரத்தாகி இருப்பதாக 50 சதவிகித நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நிறுவனங்கள் பல பிரச்சினைகளை சந்தித்து சீர்குலைந்து இருப்பதாகவும், 38 சதவிகித நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்களை முடிக்கமுடியாமல் திணறுவதாகவும் கூறுகின்றனர்.
கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீண்டு எழ சுமார் மூன்று மாதங்கள் ஆகும் என 14 சதவிகித நிறுவனங்களும், ஆறு மாதங்கள் வரை ஆகும் என 12 சதவிகித நிறுவனங்களும் கூறியுள்ளன. இத்தகைய காரணங்களால் நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை என்று 68 சதவிகித நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் நிறுவனங்களின் வருவாய் இழப்பு 50 சதவிகிதம் 80 சதவிகிதம் வரை இருப்பதாக இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 74 சதவிகித நிறுவனங்கள் 80 சதவிகிதத்துக்கு மேல் வருவாய் இழப்பைச் சந்தித்து இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.
இதைச் சமாளிக்க நிதி மற்றும் பணப்புழக்கம் போன்றவற்றில் கொள்கை முடிவுகள் எடுக்காவிடில் ஊழியர்கள் வேலை இழப்பு மற்றும் நிறுவனங்கள் பெரிய அளவில் மூடப்படும் அபாயம் உள்ளன.
மேலும், கடன் தவணை, வட்டிச்செலுத்துவது குறிப்பிட்ட காலத்துக்குத் தள்ளிவைக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கேற்ற சிறப்பு மின்கட்டண சலுகை அளிக்கப்படவேண்டும் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நிறுவனங்களை மீட்டு எடுக்க முடியும் என்று ஐஐடி ஆய்வில் தெரிவித்துள்ளது.
**ராஜ்**�,