தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தைச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 26) ஆண்கள் 39, பெண்கள் 26 பேர் என மொத்தம் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,885ஆக உள்ளது. இன்று 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் இதுவரை பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை இன்று 60 பேர் உட்பட மொத்த 1020ஆக இருக்கிறது. இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 64 பேரில் 28 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரையில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 838ஆக இருக்கிறது. நேற்று 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுப் பாதிப்பு எண்ணிக்கை 1821ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,