நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிக்க, இன்னொரு புறம் சென்னையின் பூர்வகுடிகள் சென்னைக்குள் வசிக்க குடியுரிமை மறுத்து சென்னைக்கு வெளியே துரத்தப்படுகிறார்கள்.
சென்னையில் ஓடும் கூவம் நதியைச் சுத்தம் செய்வதற்காகக் கூவம் கரையோரங்களில் வசித்து வரும் குடும்பங்களை சென்னை மாநகராட்சி அகற்றிவருகிறது. சென்னை அண்ணா சாலைக்கு அருகே உள்ள அன்னை சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் தினக்கூலித் தொழிலாளர்கள், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 2,092 குடும்பங்கள் வசித்துவந்தன. அங்கு நேற்று முன்தினம் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், நாளை உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம். அதற்குள் வீட்டை காலி செய்துகொள்ளுங்கள் என்று நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக உடமைகளை எடுத்துவைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அப்பகுதிக்கு நேற்று (டிசம்பர் 29) பொக்லைன் இயந்திரத்துடன் நுழைந்த அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் வீடுகளை இடிக்கத் தொடங்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், “அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் ஐந்து மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது என்றும், தற்போது காலி செய்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். ஆகவே, முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், எதிர்ப்பையும் மீறி இடிக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும், அவர்களை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மாற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்றன.
அத்தோடு, போராட்டத்தில் ஈடுபட்ட சமூகச் செயற்பாட்டாளர் இசையரசு உள்ளிட்ட சிலரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்ற காவல் துறையினர், அங்கு அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். அவர்கள் மீது பிரிவு 75இன் கீழ் வழக்கு பதிவு செய்து, பிறகு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டேன். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஏப்ரலில் முழு ஆண்டுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து 50 கிமீ அப்பால் பெரும்பாக்கம் பகுதிக்கு விரட்டியடித்தால் அம்மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதைச்சொல்லி ஆவேசப்பட்டனர்” என்று குறிப்பிட்டார்.
மக்களின் துயரத்தையும் கோரிக்கைகளையும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறிய திருமாவளவன், “சில நிமிடங்கள் கழித்து துணை முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு முழு ஆண்டுத் தேர்வு வரையில் தற்காலிகமாகக் குடியிருப்புகள் அகற்றம் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். அவருக்கும் தமிழக அரசுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மீண்டும் சத்தியவாணி முத்துநகருக்கு நேற்று இரவு 11 மணிக்கு மேல் திருமாவளவன் சென்று, ‘இப்போதைக்குக் கவலை வேண்டாம்’ என்று சொல்லி மக்களை அச்சத்தின் பிடியிலிருந்து தற்காலிகமாக மீட்டுள்ளார்.�,”