தமிழகம் முழுவதுமுள்ள அனைத்துக் கோயில்களிலும் உள்ள கடைகளை காலி செய்வதற்கான கால அவகாசத்தை, 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
சில மாதங்களுக்கு முன்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கோயில்களில் கடை வைத்துள்ள வியாபாரிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கடைகளைக் காலி செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே ஆணையிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடைகளைக் காலி செய்யும் உத்தரவை ரத்து செய்யுமாறு வியாபாரிகள் மேல்முறையீடு செய்தனர்.
நேற்று (நவம்பர் 1), நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடைகளைக் காலி செய்யும் உத்தரவை ரத்து செய்யக் கோரும் மனுக்களைத் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். மேலும், கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்வதற்கான கால அவகாசத்தை, 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.�,