வழக்கமான நவராத்திரிதான்… வழக்கம்போல சுண்டல்தான் என்றாலும், ஒவ்வோர் ஆண்டுமே ‘உங்க வீட்டுல என்ன சுண்டல்?’ என்று பரஸ்பரம் கேட்கத் தவறுவதில்லை. இந்தத் தடவை இதே கேள்வி உங்களிடம் வந்துவிழும்போது… இந்த கறுப்பு உளுந்து சுண்டல் பெயரைச் சொல்லுங்கள். இதை எப்படி செய்தே என்று ஆச்சர்யப்படுவார்கள். இதற்கான ரெசிப்பியை உங்களிடம் நிச்சயம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
**என்ன தேவை?**
கறுப்பு உளுந்து – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
துருவிய பனீர் – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கறுப்பு உளுந்தை ஆறு மணி நேரம் ஊறவிட்டு, உப்பு சேர்த்து மலர வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, வேகவைத்த உளுந்தைச் சேர்க்கவும். இதனுடன் இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய மல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி… இறுதியாக துருவிய பனீர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
**சிறப்பு**
பெண்களின் எல்லா பருவங்களுக்கும் ஏற்றது கறுப்பு உளுந்தில் செய்யப்படும் உணவுகள்.
[நேற்றைய ரெசிப்பி: சிவப்பு ராஜ்மா சுண்டல்](https://minnambalam.com/k/2019/09/29/1)�,