தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு வலைதளங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 வரை நடக்கிறது. இதற்கான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 10ஆம் தேதி மாலை 5 மணி டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தார். அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர அமைச்சர்களின் படங்கள் தேர்தல் விதிப்படி நீக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலிருந்தும் அமைச்சர்களின் புகைப்படங்கள் நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சரவைச் செயலாளர்களுக்கும், மாநிலச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதன்படி, பிரதமர் அலுவலக தளம், பத்திரிகை தகவல் ஆணையம் உள்ளிட்ட தளங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற அமைச்சர்களின் படங்களுக்கும் நீக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பதாகைகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை மூன்று நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.�,