tஅமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; ஸ்டாலின்

Published On:

| By Balaji

தமிழக மக்கள் குடிநீருக்கு அலைய காரணமான உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – தவறினால், முதலமைச்சர் உடனடியாக அவரை டிஸ்மிஸ் செய்து குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜூன் 14) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருந்தியபாடில்லை. நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படாமல்- கட்சிக் கூட்டங்களை நடத்திக் கொண்டும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டும் இருக்கின்றனர் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மழைப் பற்றாக்குறை இருப்பது தெரிந்தும், “நெம்மேலியில் 150 மில்லியன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும்” “சென்னை அருகில் உள்ள பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும்” நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களுக்கு 825 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய சூழலில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி “ஜூன் 15ஆம் தேதி வரைதான் 500 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய முடியும்” என்று கூறி விட்டு, பிறகு “நவம்பர் வரைகூட ஓரளவு சப்ளை செய்து விட முடியும்” என்று கூறினார். அப்படியிருக்கும் போது குடியிருப்பு வாசிகள் “ஆன்லைனில் புக்கிங்” செய்யும் டேங்கர் லாரி குடிநீருக்காக 15 முதல் 18 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏன் வந்துள்ளது? தெருத்தெருவாக மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு சைக்கிளிலும், ரிக்ஷாக்களிலும் தொலை தூரம் சென்று ஒரு குடம் தண்ணீர் சேகரிக்கத் தள்ளப்பட்டுள்ளது ஏன்? மெட்ரோ வாட்டர் குழாய்களில் வரும் குடிநீரும் பல இடங்களில் துர் நாற்றம் வீசுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சென்னைக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெறுவதற்குக் கூட ஆந்திர மாநில முதல்வரைச் சந்திக்க உள்ளாட்சித் துறை அமைச்சர் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக டெல்லிக்குச் சென்று பாஜக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து “எங்கள் கட்சிப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள், “ எங்கள் மீது எந்த ஊழல் நடவடிக்கையும் எடுத்து விடாதீர்கள்” என்று மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்டுக் கெஞ்சுவதை மட்டுமே உள்ளாட்சித் துறை அமைச்சர் இந்த மூன்று வருடங்களில் செய்து கொண்டிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்திலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும் “டெண்டர்களில்” கமிஷன் வசூல் செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு துளியை உள்ளாட்சித் துறை அமைச்சர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் காட்டியிருந்தால்- இன்று சென்னை மக்கள் குடிநீர்ப் பஞ்சத்தில் துடிக்க வேண்டிய நிலை- வந்திருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

எனவே சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் பழனிசாமி ஈடுபட வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சரின் படு தோல்விதான், இன்று சென்னை மக்கள் மட்டுமின்றி – தமிழ்நாடு மக்களும் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு முழுக்காரணம். இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அவர் ராஜினாமா செய்யத் தவறினால், முதலமைச்சர் உடனடியாக, இன்றைய குடிநீர்ப் பஞ்சத்திற்கும் கோடானகோடி மக்களின் துன்பத்திற்கும் வித்திட்ட அவரை, அமைச்சர் பதவியிலிருந்து “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share