முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும் அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும்.
ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று (ஏப்ரல் 10) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மகா துவாஜரோகனம் கொடியேற்றம் செய்து கொண்டு விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இரண்டாம் நாள் பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இதை தொடர்ந்து நாள்தோறும் இடும்பன் வாகனம், பூத வாகனம், ஆட்டுக்கடா வாகனம், தங்க மயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்தில் பஞ்சமூர்த்தி திருவிழா காட்சி நடைபெறும். தொடர்ந்து யானை வாகனம், காமதேனு வாகனம், வெண்ணைத்தாழி பல்லக்கு மற்றும் வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 18ஆம் தேதி 9ஆம் நாள் திருவிழா அன்று சித்திரை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மறுநாள் மதியம் தீர்த்தவாரியும் இரவு அவரோகணம் திக்விதர்சனம் நிகழ்ச்சியின் நிறைவாக வருகின்ற 20ஆம் தேதி புதன்கிழமை சித்திரை திருவிழா முடிந்து சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
.