சம்பா சாகுபடி: தட்டுப்பாடின்றி உரங்களை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

Published On:

| By Balaji

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போக நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக நடப்பு ஆண்டில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்றது. தற்போது குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது.

இதேபோல் சம்பா சாகுபடிக்கு 2 லட்சத்து 30,800 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை ஒரு லட்சத்து 90,800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி பயிர்களுக்கு அடி உரம் தெளிக்க வேண்டிய அவசியத்தில் விவசாயிகள் உள்ளனர்.

குறிப்பாக யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் போன்ற அடி உரங்களை 30 முதல் 40 நாட்கள் வயதுடைய சம்பா பயிர்களுக்குத் தெளித்தால் தூர் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மானிய விலையில் அரசு சார்பில் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது உரங்களின் கையிருப்பு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.

முதற்கட்டமாக 40 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு அடி உரங்கள் இட வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் உரங்களின் தட்டுப்பாடு விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

உரம் போன்ற இடுபொருட்கள் ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக ஒன்றிய அரசுக்குத் தெரிவித்து உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**

.

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share