கோடை மழை: மிளகாய் உற்பத்தி பாதிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் கோடை மழையால் மிளகாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் மிளகாய், பருத்தி விவசாயமும் நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், தேரிருவேலி, சிக்கல், இதம்பாடல், கடம்போடை, ஆலங்குளம், மல்லல் உள்ளிட்ட பல ஊர்களிலும் மிளகாய் விவசாயம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதுகுளத்தூர் தாலுகா சுற்றிய பல கிராமங்களிலும் கோடை மழையால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலையும் குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுபற்றி பேசியுள்ள முதுகுளத்தூர் அருகே வடக்கு மல்லல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், “இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. சீசன் தொடங்கிய ஒரு மாதத்தில் நன்றாக இருந்ததுடன் எதிர்பார்த்த விலையும் கிடைத்தது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரையிலும் மிளகாய் விளைச்சல் நன்றாக இருந்ததுடன் ஒரு கிலோ மிளகாய் ரூ.400 வரை விலை போனது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் செடிகளில் காய்த்த மிளகாயில் ஒருவித பாதிப்பு ஏற்பட்டு விளைச்சலும் பாதிக்கப்பட்டது.
இதனால் 400 ரூபாய்க்கு விலை போன மிளகாய் கிலோ 150 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. விலை குறைந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டும் மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த ஆண்டும் அதே நிலைமைதான் உள்ளது” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்-**
.