கொடைக்கானலில் இந்த ஆண்டு கோடை விழா நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் இ.பெரியசாமி உறுதியளித்துள்ளார்.
கொடைக்கானலில் மத்திய அரசின் சார்பில் கூட்டுறவு ஊழியர்கள் பயிற்சிக்கூடம் அமைக்கப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு தொடர்பாக கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோடை விழா மலர்க் கண்காட்சி இந்த ஆண்டு கண்டிப்பாக நடைபெறும். இதில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைக்க கோரிக்கை விடுக்கப்படும். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறை உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் ஏற்படும் தீவிபத்துகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணப்படும்” என்று கூறினார்.
அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் விசாகன் உடனிருந்தார். முன்னதாக கொடைக்கானல் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்து கொண்டார்.
**-ராஜ்**
.