பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

Published On:

| By admin

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள சித்தோடு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட தலைவர் ராஜூ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 42 ரூபாயாகவும், எருமைப் பாலுக்கு 51 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்தந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பாலின் தரம் மற்றும் அளவுகளின் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.
ஆவின் கூட்டுறவு ஒன்றியத்துக்கு பால் வழங்கும் கறவை மாடுகளுக்கு 50 சதவிகித மானியத்தில் கால்நடை தீவனமும், முதலமைச்சர் காப்பீடும் வழங்க வேண்டும். இந்திய பால் கூட்டுறவு சங்கங்களின் நடைமுறையில் இல்லாத ரிச்மண்ட் பார்முலா மூலம் பால் கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதே சமயத்தில் ஐஎஸ்ஐ பார்முலாவை அமல்படுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியில் சத்துமிக்க பால் வழங்க வேண்டும். நீண்ட காலமாக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் சங்க பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு, விழுப்புரம், சேலம், வேலூர், திருச்சி, கோவை, சேலம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel