மகாராஷ்டிர துணை முதல்வராக நேற்று பதவியேற்ற அஜித் பவாரின் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவிதான் பறிக்கப்பட்டதே தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் தற்காலிகமாகக் கூட நீக்கப்படவில்லை.
இதுபற்றி, [அஜித் பவார் -சரத் பவார்: மறைமுக ஒப்பந்தமா? சிவசேனா சந்தேகம்](https://minnambalam.com/k/2019/11/24/11/sarath-pawar-ajith-pawar-backdoor-agreement-sivasena-doubt)என்ற தலைப்பில் இன்று காலை பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (நவம்பர் 24) காலையில் இருந்து மும்பையில் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க்கின்றன.
அஜித் பவார் நேற்று முதல் தனது சகோதரர் சீனிவாஸ் பவார் இல்லத்திலேயே இருந்தவர் இன்று அதிகாலையில்தான் தனது சர்ச்கேட் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இன்று காலை அஜித் பவார் வீட்டுக்கு மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவரான ஜெயந்த் பாட்டில் சென்றுள்ளார். இவர்தான் நேற்று அஜித் பவாருக்கு பதில் சட்டமன்றக் குழுத் தலைவரின் அதிகாரங்களை பெற்றவராக அறிவிக்கப்படார். இன்று அஜித் பவாரை சந்தித்து, சரத்பவார் உங்களை மன்னித்துவிடுவார், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் கட்சிக்குத் திரும்புங்கள் என்று கேட்டுள்ளார்.
ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக், “அஜித் பவார் தவறு செய்துவிட்டார். ஆனால் அதை உணர்ந்து அவர் திரும்பி வரவேண்டும். நேற்றுமுதலே அவரைத் தொடர்புகொள்ள முயல்கிறோம். அவர் தொடர்பைத் தவிர்த்து வருகிறார். அவர் மீண்டும் வரவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
ஆக இன்று உச்ச நீதிமன்றத்தில் அஜித் பவாருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் வாதங்களை எடுத்து வைக்க மும்பையிலோ அஜித் பவார் வீட்டில் சரத் பவாரின் தூதுவர் ஜெயந்த் பாட்டில் சமரசம் பேசி வருகிறார்.�,