கொரோனா – கிராமங்களில் கவனம் செலுத்த வேண்டும்: கமல்

Published On:

| By Balaji

கிராமப்பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும், இதனை முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கையின் காரணமாகக் கடந்த சில நாட்களாகப் பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் தற்போது மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும், கிராமப் பகுதிகளிலும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லாததால் மக்கள் மருத்துவ வசதிக்காக நகர்ப்புறங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் கிராமப்புறங்களில் கொரோனா அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நகரங்களில் பரவலான ஆய்வுகள் மூலம் நோய்த்தொற்று இருப்பதை ஆராயும் அரசு, கிராமப்புறங்களின் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

நோய்த்தொற்று கண்டறிதல், அதற்கான சிகிச்சைகள், அது குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் கிராமங்களில் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் வந்திருப்பதற்கு, கிராமங்களை அரசு இத்தனை நாள் கண்டுகொள்ளாமல் விட்டதே காரணம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “தமிழகத்தின் பல கிராமங்களில் ஆரம்பச் சுகாதார மையங்கள் முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள், மருத்துவ ஊழியர்களோ இன்றிதான் செயல்படுகின்றன. பல நவீன மருத்துவமனைகளைக் கொண்ட பெரும் நகரங்கள் கொரோனாவின் தாக்கத்தில் தள்ளாடும்போது ஆரம்ப சுகாதார மையங்கள் நோய்த்தொற்று அதிகரித்தால் என்னவாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

முறையான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார மையங்கள், அது இல்லையென்றால் அருகில் உள்ள நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கும் கிராமங்களில் இந்த கொரோனா தொற்று வருமுன் தடுக்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். வந்தபின் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயம் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கிராமங்களில் வைரஸ் தொற்று பரவினால் நம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பொருளாதார அளவில், மருத்துவ அளவில் மட்டுமல்ல அடிப்படைத் தேவைகள் கூட கிட்டாத அளவிற்குச் செல்லக்கூடும்.

இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில் உள்ளது எனப் பாடப்புத்தகத்தில் மட்டும் சொல்லாமல், செயலில் காண்பித்து, கிராமங்கள் இத்தொற்று பரவலில் சிக்காமல் இருக்க விரைந்து காத்திடுவது நம் கடமை” என்று தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share