ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!

Published On:

| By Balaji

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தன. அந்தவகையில், இந்தாண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தச்சன்குறிச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு தமிழகத்திலேயே நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு ஆகும்.

அந்தவகையில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று(ஜனவரி 13) தச்சன்குறிச்சில் நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 5 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயங்கள், கட்டில், மிக்சி, கிரைண்டர் சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிற்கு மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கொரோனா தொற்று காரணமாக, தமிழக அரசின் நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு கோவையில் 21ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஜல்லிகட்டு போட்டியில் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500-600 காளைகள் பங்கேற்கும்.

மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக வைத்து இருக்க வேண்டும். கால்நடை மருத்துவர்கள் மூலம் காளை மாடுகளுக்கு பரிசோதனை செய்யப்படும். ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை, தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். கோவை ஜல்லிக்கட்டு அமைப்பு சார்பில் நடைபெறும் போட்டியை மாவட்ட நிர்வாகம் முழுமையாக கண்காணிக்கும்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், ரேக்ளா உள்ளிட்ட பிற போட்டிகளுக்கு அனுமதி கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

கோவை ஜல்லிக்கட்டு போட்டியின்போது 2 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதியும் நடைபெறும்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel