தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் ஆலோசனை!
�
எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் மருத்துவ குழுவினருடன் அவரது மகன் எஸ்பிபி சரண் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக அளவில் ரசிகர்களைக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முதல் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிவித்தது.
இந்த நிலையில் அவர் மீண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று மாலை 6.30 மணிக்கு அறிக்கை வெளியிட்ட எம்ஜிஎம் மருத்துவமனை அதன் பிறகு எஸ்பிபி உடல்நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, சகோதரி சைலஜா என அவரது குடும்பத்தினர் அனைவரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
அதோடு அவரது ரசிகர்களும் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்குவார்கள் என்பதால் எம்ஜிஎம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினருடன் மகன் சரண் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட திரை பிரபலங்களும் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே விரைவில் எஸ்பிபியின் உடல் நிலை குறித்த மருத்துவமனையின் அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-கவிபிரியா**�,