மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் ஒவ்வொரு மருத்துவமனையாக 13 மணி நேரம் அலைந்ததில் ஆம்புலன்ஸிலேயே ஒரு கர்ப்பிணி உயிர் விட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா-காசியாபாத் எல்லையில் கோடா காலனியைச் சேர்ந்தவர் விஜேந்தர் சிங். இவர் மனைவி நீலம், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு (ஜூன் 5) நீலத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்து, வழக்கமாக மருத்துவ ஆலோசனைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை கணவர் விஜேந்தர் சிங் கூட்டிச் சென்றார். ஆனால், அங்கு படுக்கை இல்லை எனக்கூறி அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்த நிலையில், 13 மணி நேரத்தில் ஆம்புலன்ஸிலேயே நீலம், பிரசவ வேதனையில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அவர் கணவர் விஜேந்தர் சிங், “நொய்டா, கவுதம் புத்தா நகர், வைஷாலி, காசியாபாத் என ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்தோம். இவற்றில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை என எட்டு மருத்துவமனைகள் அடங்கும். ஆனால், படுக்கை வசதி இல்லை என்று எல்லா மருத்துவமனைகளிலும் திருப்பி அனுப்பினர். இறுதியாக, நொய்டாவில் உள்ள அரசு மருத்துவமனையின் வாசலில் ஆம்புலன்ஸிலேயே என் மனைவி இறந்து விட்டார்” எனக் கூறியுள்ளார்.
இவரது பேட்டி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கவுதம புத்தா நகர் மாவட்ட கலெக்டர் சுஹாஸ், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் நடக்கும் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். கடந்த மாதம் 25ஆம் தேதி, ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்தும் சிகிச்சை கிடைக்காததால் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**�,