ஒருநாள் வேலைநிறுத்தம் முடிந்தநிலையில் சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சிவகாசி பகுதியில் கடந்த பிப்ரவரியில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் வெடி விபத்துக்களைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் வெடி பொருள் கட்டுப்பாட்டு துறையும் தனித்தனியாகச் சோதனை நடத்தி விதிமுறைகள் மீறி இயங்கிய 30க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலைகளைக் காலவரையின்றி மூட உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த மார்ச் 8ஆம் தேதி துவங்கிய போராட்டத்தில் 90 சதவீத பட்டாசு ஆலைகள் மூடப்பட்டநிலையில் அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்படும் என டான்பாமா தலைவர் கணேசன் நேற்று (மார்ச் 9) தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பட்டாசு ஆலைகளை மூடியது தொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும், மாவட்ட நிர்வாகமும் எங்களிடம் பேசினர். தொழிலாளர்களின் நலன் கருதி ஆலைகளைத் திறக்க வேண்டும். பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது என கேட்டுக்கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு தொடரும், விதிமீறல்கள் இருந்தால் சுட்டிக்காட்டப்படும். அதனை சரிசெய்ய அறிவுரை வழங்கப்படும். அதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகும் விதிமீறல்கள் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று இன்று (மார்ச் 10) முதல் பட்டாசு ஆலைகளைத் திறந்துள்ளோம். நாங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதில்லை. எங்கள் கவனத்தையும் மீறி ஏதாவது நடந்தால் அதனைச் சுட்டிக்காட்டினால் சரி செய்யத் தயாராக இருக்கிறோம். வெடி விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வெடி பொருள் கட்டுப் பாட்டுத்துறை விதிக்கும் விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றார். இதையடுத்து சிவகாசியில் புதன்கிழமை முதல் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
**மேலும் ஒருவர் பலி**
அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடுச்சூரங்குடி கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி என்ற மைக்கேல்ராஜ் (48) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
**சக்தி பரமசிவன்**
�,