செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டவர்களைத் துரத்திச் சென்று பிடித்த காவல் உதவி ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் என்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் செல்போன்களை பறிகொடுப்பவர்கள் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் புது புது டெக்னிக்கை செல்போன் பறிப்பு கும்பல் பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த திருடர்களை உதவி ஆய்வாளர் ஒருவர் ரிஸ்க் எடுத்து தனியாளாக அவர்களைத் துரத்திச் சென்று பிடித்த வீடியோவை வெளியிட்டு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
It’s not a scene from any movie. But the real life hero SI Antiln Ramesh single handed chasing and catching a mobile snatcher riding a stolen bike. Follow up led to arrest of three more accused and recovery of 11 snatched/stolen mobiles. pic.twitter.com/FJYdoma7I4
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) November 27, 2020
அண்மையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நடந்து சென்ற ஒருவரிடம் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். அதனைப் பார்த்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்டலின் ரமேஷ் கொள்ளையர்களைத் தனிநபராகத் தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கினார்.
அப்போது இருவரில் ஒருவர் ஆய்வாளர் மடக்கியதும் தப்பிய நிலையில் மற்றொருவரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார். இதையடுத்து கொள்ளையனின் கையில் ஆயுதம் ஏதேனும் உள்ளதா என்பதைப்பற்றியெல்லாம் சற்றும் யோசிக்காமல், அவரது பைக்கில் இருந்து அப்படியே கொள்ளையனின் ஹெல்மெட்டை இழுத்துப் பிடிக்க முயல்கிறார் உதவி ஆய்வாளர். இதையடுத்து கொள்ளையன் இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்றாலும் அவரது சட்டையையும் ஹெல்மெட்டையும் பிடித்துக் கொண்டு பின்னாலே துரத்திச் சென்று கீழே தள்ளிப் பிடித்துள்ளார் ஆண்டலின் ரமேஷ்.
ஒரு சினிமா காட்சிபோல் பதிவாகியுள்ள இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், “எந்த படத்திலிருந்தும் இந்த காட்சி எடுக்கப்படவில்லை. நிஜ ஹீரோ சப் இன்ஸ்பெக்டர் ஆண்டலின் ரமேஷ் தனியாளாகத் துரத்திச் சென்று, திருட்டு பைக்கில் சென்ற செல்போன் கொள்ளையர்களை பிடித்துள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**�,”