‘சீரம் இந்தியா’ தீ விபத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணி, பதப்படுத்துதலில் பாதிப்பு இல்லை என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து, புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்து வழங்குகிறது.
இந்தத் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடந்த 3ஆம் தேதி அளித்தது. ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி 16ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கி நடந்து வருகிறது. புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகிறது. பூட்டான், நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சீரம் நிறுவனத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நுழைவு வாயிலில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்கு மற்றும் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கட்டடத்தில் நடந்துகொண்டிருந்த வெல்டிங், தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட்டின் தலைமை செயல் அதிகாரி பூனம் ஆதர்வாலாவை நேற்று (ஜனவரி 22) நேரில் சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, “சீரம் மையத்தில்
நடந்த தீ விபத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பகுதி மற்றும் பதப்படுத்தும் பகுதி நல்லவேளையாக பாதிக்கப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து வெகுதொலைவில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.
“இதுபற்றி விசாரணை நடத்தப்படும். ஆய்வு அறிக்கை வரும்வரை அதுபற்றி எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
**ராஜ்**�,