பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களில் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து, நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர், புதுக்காடு, கல்ராய்மொக்கை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கதளி, நேந்திரன் ரக வாழைகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது வாழைகள் குலைதள்ளி அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் நீரில் மூழ்கி வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.
அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீரில் மூழ்கிய வாழைகளுக்கு ரூ.20 லட்சம் வரை செலவிட்டுள்ளதால் சேதமடைந்த வாழைகளைக் கணக்கெடுப்பு செய்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
�,”