Sகொடநாடு கொலை: மறுக்கும் சஜீவன்!

Published On:

| By Balaji

‘கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று கோவையைச் சேர்ந்த மர வியாபாரி சஜீவன் கூறியுள்ளார். கொடநாடு சம்பவம் நடந்தபோது தான் துபாயில் இருந்ததாகவும், சயன், மனோஜ் உள்ளிட்ட யாரையும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். டிரைவர் கனகராஜைத் தனக்கு நன்றாக தெரியும் என்றும், அவரை போயஸ் கார்டனில் இருந்து வேலையை விட்டு நிறுத்திய பின்னர், அவருடன் தான் பேசுவதில்லை என்றும் சஜீவன் கூறியுள்ளார்.

கொடநாட்டில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மர்ம கும்பல், 10ஆம் எண் கேட்டில் இருந்த காவலாளியைக் கொன்றுவிட்டு ஆவணங்களைக் கொள்ளையடித்து சென்று விட்டது. இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அவரது நண்பர் சயன் விபத்தில் சிக்கி கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக பலரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் கோவை சிறையில் அடைத்துள்ளனர். அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

மனோஜ் சாமி கைது

இந்த வழக்கில் கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்ட மேலும் இருவர் தலைமறைவாகினர். இதைத் தொடர்ந்து அந்த இருவரில் ஒருவரை போலீஸார் நேற்று (4.5.2017) கேரளாவில் கைது செய்தனர். கேரள மாநிலம் வலையாறு பகுதியில் தங்கியிருந்திருக்கிறார் மனோஜ் சாமி. இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளிகளில் இவரும் ஒருவர். இவர் வலையாறு பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைக்க, அவரை நேற்று கைது செய்திருக்கிறார்கள்.

கொடநாடு சம்பவம் மனோஜ் சாமியின் ஆலோசனையின் அடிப்படையில் நடந்ததாக முன்பு கூறப்பட்டது. இந்நிலையில் மனோஜ் சாமியிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸாரின் சந்தேகம்

இந்த கொலை, கொள்ளை சம்பவத்துகு கூடலூர், கோவையில் மரக்கடை வைத்துள்ள சஜீவன் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. முன்னாள் அமைச்சருடன் நெருங்கி தொடர்பில் இருந்த இவர், யாருடைய அனுமதியும் இன்று கொடநாடு பங்களாவுக்கு சென்று வருவார் என்பதாலும் கனகராஜ், சயனுடன் தொடர்பில் இருந்தவர் என்பதாலும் சந்தேகம் எழுந்தது.

கொடநாடு சம்பவம் நிகழ்ந்தபோது அவர் துபாயில் இருந்தார். இது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாள்களாக ஊடக செய்திகளில் அடிபட்டார் சஜீவன். இன்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தனக்கும், கொடநாடு சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சம்பவம் நடைபெற்றபோது தான் துபாயில் இருந்ததாகவும், சயன் உள்ளிட்ட யாரையும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சஜீவன், “டிரைவர் கனகராஜை எனக்குத் தெரியும். போயஸ் கார்டன் பணியில் இருந்து அவரை நிறுத்திய பின்னர் நான் பேசியதில்லை. மற்றபடி சயன் யார் என்றே எனக்குத் தெரியாது. மனோஜ் சாமியையும் எனக்குத் தெரியாது.

இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் யாருக்குத் தொடர்பு இருக்கிறது என்று காவல்துறையினர்தான் கண்டுபிடிக்க வேண்டும். கனகராஜுக்குத் தொடர்பு இருக்கிறதா, முன்னாள் அமைச்சர் மில்லருக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது” என்று சஜீவன் தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel