sஉறவுகளை நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்!

Published On:

| By Balaji

சத்குரு ஜகி வாசுதேவ்

(அற்புதமான உறவுகள் அமைய… காலைப் பதிப்பில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி…)

இரண்டு நபர்களுக்குள் உறவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன?

ஒரு நபராக, நீங்கள் ஒரு உடலைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் பெற்ற அனுபவம் மற்றும் தகவல்களால், நீங்கள் குறிப்பிட்ட சுபாவம் பெற்றிருக்கிறீர்கள். மொத்தத்தில் ஒரு குறிப்பிட்ட மனம், ஒருவிதமான உடல், ஒருவிதமான உணர்ச்சி, குறிப்பிட்ட விதங்களில் விருப்பு, வெறுப்புகள், குறிப்பிட்ட விதங்களிலான கருத்துக்கள் இவை எல்லாவற்றின் ஒட்டுமொத்தச் சேர்க்கையாக இருப்பதுதான் ‘நீங்கள்’.

உங்களுடன் உறவுநிலையில் இருக்கும் ‘மற்றொருவர்’ – அவரும் இதேபோன்ற கலவையான அம்சங்களுடன்தான் இருக்கிறார். ஆனால் வேறுவகையில் இருக்கிறார். இருவருக்குள்ளும் ஒரே கலவைதான். ஆனால் இரண்டும் பொருந்துவதில்லை. திடீரென்று அவை பொருந்துவதாகத் தோன்றும். அப்போது எல்லாமே – உடல்நிலை, மனநிலை, உணர்ச்சி அனைத்தும் – அழகாக இருக்கும், ஒத்திசைவாக இருக்கும். ஆனால் அடுத்த கணம் நீங்கள் எவ்விதமாக முயற்சித்தாலும், அப்போது அது பொருந்துவதில்லை.

ஒவ்வொரு உறவு நிலையிலும் உள்ள இரண்டு நபர்கள் – நண்பர்களாக இருக்கலாம், பெற்றோராக இருக்கலாம், கணவன் மனைவியாக இருக்கலாம் அல்லது வேறு எந்த உறவாகவும் இருக்கலாம் – செய்வதற்கு முயற்சிப்பதெல்லாம் இதுதான். ஒரு உடல், ஒரு மனம் மற்றும் ஒரு உணர்ச்சி அமைப்பு எப்படியாவது இன்னொரு உடல், இன்னொரு மனம் மற்றும் இன்னொரு உணர்ச்சி அமைப்புடன் பொருந்திக்கொள்வதற்கு முயற்சிக்கிறது. ஆனால் இந்த இரண்டு உடல்கள், இரண்டு மனங்கள் மற்றும் இரண்டு உணர்ச்சி நிலைகள், 24 மணிநேரத்தின் ஒவ்வொரு கணத்திலும் கச்சிதமாகப் பொருந்தி இருக்கவே முடியாது.

யாரோ ஒருவருடன் பொருந்த முடியாத பிரச்சினை உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு உடலும் தனித்துவம் மிக்கது, ஒவ்வொரு மனமும் தனித்துவமானது, ஒவ்வொரு உணர்ச்சி நிலையின் அமைப்பும் தனித்தன்மையானது. அவை வேறொன்றுடன் ஒருபோதும் கச்சிதமாகப் பொருந்த முடியாது. அப்படிப்பட்ட வாய்ப்பு இருப்பதாக யாரேனும் எண்ணினால், அவர் தனது வாழ்க்கையை வீணடித்துவிடுவார். அது பொருந்தி நிற்பது குறிப்பிட்ட கணங்களுக்கு மட்டும்தான், மற்ற தருணங்களில் அது பொருந்துவதில்லை என்பதை அவர் புரிந்துகொண்டால், அதன் பிறகு அவர்கள் தங்களது உறவை ஒரு குறிப்பிட்ட விதமாக, சுமுகமாக நடத்திக்கொள்வார்கள்.

மக்கள், யதார்த்தமாக இல்லாமல் அதிகமான கற்பனையிலேயே உறவுமுறைகளை உருவாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இப்போதைக்கு கற்பனையாக இருப்பது ஒரு நல்ல நிலையாக இருக்கலாம், ஆனால் நாளையே அது அசிங்கமான பயணமாக இருக்கும். எனவே உங்களுடைய உறவுமுறைகளை நிர்வகிக்க முயற்சிக்காமல் – உண்மையிலேயே அது சிரமம்தான் – மற்றவரை உங்களின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ள நீங்கள் கற்றுக்கொண்டால், உங்களுடைய வாழ்க்கை சந்தோஷத்தின் தேடுதலாக இல்லாமல் ஆனந்தத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

அப்போது, உறவு நிலைகளில் பல்வேறு நிறங்கள் இருப்பதையும், ஆனால் ஒவ்வொரு நிறமுமே அனுபவித்து மகிழக்கூடியதாக இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். இப்படி இணைத்துக்கொள்ளும்போது, அங்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அது சரிதான். ஆனால், புத்திசாலித்தனமான நிர்வாகம் என்று நினைத்து உங்களுடைய உறவுகளை நீங்கள் நிர்வகிக்க முயற்சித்தால், அது உங்களுக்கு நரகத்தைத்தான் அளிக்கும். பூமியின்மீது வலம்வரும் அதிபுத்திசாலிகள் அல்லது தங்களை உண்மையான புத்திசாலிகளாக நினைக்கிற அந்த மனிதர்கள் எப்போதும் மிக மோசமான உறவு நிலைகளைத்தான் கொண்டிருக்கின்றனர். இப்படித்தான் நிச்சயம் நிகழ்கிறது என்று இல்லாவிட்டாலும் பொதுவாக அப்படித்தான் நிகழ்கிறது. மிக எளிமையான மனிதர்களாக இருப்பவர்களுக்கு அற்புதமான உறவுநிலைகள் வசப்படுகின்றன. ஏனெனில் அது நிர்வாகம் தொடர்பானது அல்ல.

யாருமே நிர்வகிக்கப்பட விரும்புவதில்லை. நீங்கள் யாரையோ நிர்வகிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை அவர்கள் உணர்ந்துவிட்டால், பிறகு அவர்கள் உங்களுக்கு நரகத்தையே கொடுப்பார்கள். பல வழிகளில் உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் துன்பமாக ஆக்கிவிடுவார்கள். இந்த உலகில் பெரும்பாலான மக்களுக்கு அவர்களுடைய எதிரிகள் துன்பம் தருவதில்லை, அவர்களுடைய அன்புக்குரியவர்கள்தான் உயிரை எடுக்கின்றனர்.

உங்களுடைய எதிரி உங்களுடைய உயிரை எடுத்தால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது, ஆனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் மக்களே ஒருவர் உயிரை மற்றவர் எடுக்கிறார்கள். இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக மக்கள் இவ்வாறே அனுபவித்துவருகிறார்கள். ஏனென்றால் மற்றவர் எப்போதும் தன்னால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றே மக்கள் நம்புகிறார்கள். மற்றவரை நிர்வகிக்க முயற்சிக்க வேண்டாம். அவரை எவ்வாறு இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே பாருங்கள். அப்போது அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் குளறுபடிகள் என்ன என்பது உங்களுக்குப் புரியாமல் போகலாம். இருப்பினும் அது சரியே.

உங்களுக்குள் எங்கோ முழுமைபெறாத உணர்வு இருப்பதால்தான், உங்களுக்கு உறவு என்ற ஒரு விஷயம் தேவையாக உள்ளது. இந்த முழுமையற்ற உணர்விலிருந்து நீங்கள் விடுபட்டால், மற்றவரை நாம் எதுவும் நிர்வகிக்க வேண்டியதில்லை என்ற அந்த நிலையை நீங்கள் அடைந்துவிட்டால், அதன் பிறகு, மற்ற அனைவரும் உங்களுடன் இருப்பதற்கு விரும்புவார்கள். ஏனென்றால் உங்கள் தேவை போய்விட்டது. இதுதான் வாழ்க்கை பற்றிய வேடிக்கையான விஷயம். உங்களுக்கு ஒரு தேவை இருக்கும்பொழுது, எவரும் உங்களுடன் இருப்பதற்கு விரும்புவதில்லை. உங்களது தேவை விலகிவிடும்பொழுது, ஒவ்வொருவரும் உங்களுடன் இருக்க விரும்புகின்றனர்.

பூ மலர்ந்த போதுதான், தேனீக்கள் நாடிவரும், மலராத மொட்டாக இருந்தால், தேனீக்கள் நாடி வராது. நீங்கள் மலராத ஒரு மொட்டாக இருந்துகொண்டு, தேனீக்களை அழைத்தால், அவை வராது. நீங்கள் மலர்ச்சி அடைந்தால், அழைப்பு விடுக்க வேண்டிய தேவையே இல்லை, அவைகள் எப்படியும் தேடி வரும்.

ஆகவே, உங்களுக்கு அற்புதமான உறவுகள் வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், உறவுநிலையை ‘நிர்வகிக்க’ முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் தற்போது இருக்கும் நிலையிலிருந்து உடல்நிலையிலும், மனநிலையிலும், உணர்ச்சி நிலையிலும், சக்தி நிலையிலும் உங்களை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்று பாருங்கள். நீங்கள் மிக உயரிய நிலைக்கு உங்களை மேம்படுத்திக்கொண்டால், ஒவ்வொருவரும் உங்களுடன் உறவு நிலையை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ளாமல், ஒவ்வொன்றையும் நிர்வகிக்க மட்டும் முயற்சி செய்தால், அது மிகவும் மனஅழுத்தம் தருவதாகத்தான் இருக்கும்.

ஒரு மனிதர் தனது இருத்தலின் தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது மற்ற அனைத்தும் இயல்பாகவே நிர்வகிக்கப்படுகிறது. நீங்கள் யார் என்பது மேம்படும்போதுதான், உங்களது தொழிலாக இருந்தாலும், உங்களது உறவுநிலையாக இருந்தாலும் அல்லது உங்களுடைய வாழ்க்கையின் எந்த அம்சமாக இருந்தாலும் தனக்குரிய உச்சபட்ச சிறப்புடன் திகழும்.

[அற்புதமான உறவுகள் அமைய… பகுதி 1](https://minnambalam.com/k/2019/02/16/25)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share