அதிமுக ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து முறையிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (டிசம்பர் 8) அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டில் அதிமுக அரசு அமைந்த நாள் முதல் இன்று வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் மட்டும்தான் நடைபெற்றுவருகிறது. தமிழக அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் அக்கறை காட்டாமல் ஊழலில் மட்டுமே பினாமி அரசு தீவிரம் காட்டி வருகிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஜனநாயகம் என்பதன் பொருள் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்பதாகும். ஆனால், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில், குறிப்பாக 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட எந்த அரசுக்கும் மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தோன்றவில்லை” என்று விமர்சித்துள்ள அவர், அரசுத் துறை பணி நியமனங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் ஊழல் செய்த நிலை மாறி, இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்க்கும் வழக்கம் உருவாகியுள்ளது என்றும் ஆற்று மணல், தாது மணல், கிரானைட் ஆகியவை வரன்முறை இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான 18 குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார்ப் பட்டியலை கடந்த 17.02.2015 அன்று அப்போதைய ஆளுநர் ரோசய்யாவிடம் பாமக குழு நேரில் வழங்கியது. இது தொடர்பாக, புகாரை முதலமைச்சருக்கு அனுப்பி, அவரது கருத்துக்களை கேட்டு அதனடிப்படையில் அக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்திருக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், “ஆனால் ஊழல் புகார்கள் மீது முந்தைய ஆளுநர் ரோசய்யா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசு மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. ஆட்சியாளர்களின் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், துணிச்சல் பெற்ற ஆளுங்கட்சியினர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று விமர்சித்துள்ளார்
2015ஆம் ஆண்டு ஆளுநரிடம் புகார் மனு அளித்த பிறகு கடந்த 30 மாதங்களில் ஏராளமான புதிய ஊழல்கள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ள அவர், அவற்றின் மூலம் தமிழக அரசுக்குப் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவை குறித்து விசாரணைக்கு ஆணையிடும்படி அரசுக்கு விடுத்த வேண்டுகோள்கள் விழலுக்கு இறைத்த நீராயின என்று வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் நீடிக்கும் வரை தமிழகத்திற்கு வளர்ச்சி என்பது சாத்தியமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், “தமிழகத்தில் ஊழல் ஒழிக்கப்படுவதுடன், ஊழல் குற்றத்தை செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகக் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை (டிசம்பர் 9) சந்தித்து முறையிடவுள்ளனர்.�,