�அஜித் தற்போது நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் அஜித்தைச் சந்தித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகிவருகிறது. அமிதாப் பச்சன் நடித்த வழக்கறிஞர் வேடத்தில் அஜித் நடிக்கிறார். தப்ஸி பன்னு கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்துள்ளார். அஜித்துடன் அவர் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. சந்திப்பின்போது சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் சில நிமிடங்கள் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியதர்ஷன் தற்போது மோகன்லாலைக் கதாநாயகனாகக்கொண்டு மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
வித்யா பாலன், அபிராமி வெங்கடாசலம், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
ஏற்கெனவே 20 சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவுற்றுள்ள நிலையில் சமீபத்தில் அஜித் படக்குழுவுடன் இணைந்து படப்பிடிப்பில் முழுவீச்சுடன் இயங்கிவருகிறார். அடுத்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த காட்சிகளின் படப்பிடிப்பையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மே மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.�,