பொது இடங்களில் குப்பை: மூன்று நாட்களில் ரூ.6.43 லட்சம் அபராதம்!

Published On:

| By Balaji

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களிடமிருந்து ரூ. 6.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, குப்பைகளைத் தரம் பிரிக்காமல் கொட்டும் தனிநபர் இல்லங்களுக்கு ரூ. 100, அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ரூ. 1,000, பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் என்றால் ரூ. 5,000 வரை அபராதமும், பொது இடங்களில் கட்டுமானம், இடிபாடான கழிவுப்பொருள்கள் ஒரு டன் அளவில் கொட்டினால் ரூ. 2,000, ஒரு டன்னிற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், தோட்டக் கழிவுகள் மரக் கழிவுகளைப் பொதுவிடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ. 200, கழிவுநீர்ப் பாதை , கால்வாய், நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ. 500, திடக்கழிவுகளை தனியார் இடங்களில் எறிந்தால் ரூ. 500, பொது இடங்களில் எறிந்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில்,கடந்த மூன்று(அக்டோபர் 11-13) நாட்களில் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 நபர்களிடமிருந்து மூன்று லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாயும், பொது இடங்களில் கட்டுமான பொருள்களைக் கொட்டிய 123 நபர்களிடமிருந்து மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் என மொத்தமாக ஆறு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல. மக்களே குப்பைகளை கொட்டாமல் தங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share