அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப் கார் சோதனை!

Published On:

| By admin

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர் மலையில் மலை உச்சியில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த சிவஸ்தலம் ஆனது 1,017 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. இத்திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ரோப் கார் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு மீண்டும் ரோப் கார் பணிகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற துவங்கியது.
இடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொய்வான பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று முழுமை பெறாத நிலையில், கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு என்று அவசர அவசரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜூன் மாதம் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டு ரோப் கார் பணிகளை 9 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அய்யர்மலை திருக்கோவிலில் சில நாட்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று பின்னர் பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டு மொத்தமாக 6.17 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த ரோப் கார் சோதனை ஓட்டத்தை குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கம் துவக்கி வைத்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share