பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தைப் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன் ஏற்பாடு பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு வெல்லம் அத்தியாவசியமானதாகும். எனவே வெல்லம் உற்பத்தியாளர்கள் வெல்லம் உற்பத்தியை தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக உருண்டை வெல்லம் உற்பத்தி தீவிரம் அடைந்து உள்ளது.
ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பில் அமைந்து உள்ள கரும்பு ஆலையில் வெல்லம் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. கரும்பு சாற்றினை கொப்பரைகளில் ஊற்றி காய்த்து சரியான பதத்தில் பாகு எடுத்து, அதை உருண்டை வெல்லமாகச் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கரும்பு ஆலை உரிமையாளர் பரமசிவம் என்பவர், “உருண்டை வெல்லத்தின் தேவை பொங்கல் பண்டிகையின் போது அதிகமாக இருக்கும். வழக்கமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலம் பொங்கல் பொருட்கள் வழங்கும்போது உருண்டை வெல்லமும் வழங்கப்படும். இதற்காக அதிக ஆர்டர்கள் வரும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஆர்டர்கள் எதுவும் வரவில்லை.
இதுபோல் வியாபாரிகளும் இன்னும் ஆர்டர்கள் தரவில்லை. எப்படியும் ஆர்டர்கள் வரும் என்ற நம்பிக்கையில் வெல்லம் தயாரித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகையில் வெல்லம் விற்பனை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே உற்பத்தி குறைவாகவே இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் இன்னும் கரும்பு ஆலைகள் முழுமையாக இயங்க தொடங்கவில்லை. தற்போது மூன்றில் ஒரு பங்கு ஆலைகள் மட்டுமே உற்பத்தியைத் தொடங்கி உள்ளன.
அதுவும் தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காரணம், கரும்பு விலை, கரும்பு வெட்டும் கூலி, வாகன வாடகை ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ளன. இதுபோல் கரும்பு ஆலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் கூலி அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக அதிக உற்பத்தி இல்லாத நிலையிலும் கூலி கொடுத்து வைத்திருக்கிறோம்.
பல ஆண்டுகளாகவே உருண்டை வெல்லம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்ட நிலையிலும், எங்களிடம் இருந்து வியாபாரிகள் அதே விலைக்குதான் வாங்குகிறார்கள்.
இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே கரும்பு வெல்லம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம், இதை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதியும், இந்தத் தொழிலை காப்பாற்ற வேண்டியும் அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருண்டை வெல்லத்துக்கு விலை உயர்வு செய்ய ஆவன செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
**-ராஜ்**
.�,