மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைத்திடுக: கே.எஸ்.அழகிரி

public

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் நாளை (ஏப்ரல் 15) முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 விதிகளின்படி, ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் தொடங்கி, கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களில் இருந்து படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து, மீன்பிடித் தடைக்காலத்திலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 135 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனைக் கருத்தில்கொண்டு நடப்பு 2021ஆம் ஆண்டு மீன்பிடித் தடைக்காலத்தை 61 நாட்களிலிருந்து 45 நாட்களாகக் குறைத்து அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “இந்த மீன்பிடித் தடைக்காலம் பொருத்தமற்ற நேரத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடைக்காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை என்பதற்கு பதிலாக, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை என மாற்றியமைக்க வேண்டும்.

ஏனெனில், கடந்த ஆண்டில் 135 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதன்படி, இனவிருத்தி நடைபெறும் நேரத்தில் மீனவர்களை அனுமதித்துவிட்டு, மீன் வகைகள் இனவிருத்தி நடைபெறாத நேரத்தில் மீனவர்களை மீன் பிடிக்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் சினைகள், மீன் குஞ்சுகளுடன் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மீனவர்கள் மீன் பிடித்து வருவதால் ஆண்டுதோறும் மீன்வரத்து குறைந்து வருகிறது.

மேலும், நல்ல மழைப்பொழிவு இருக்கும் மாதங்களான அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் மீன் வகைகளில் சினை முட்டைகள், குஞ்சுகளாக இருப்பதால் அதற்கேற்றவாறு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தைத் திருத்தியமைத்து மீன்பிடித் தடைக் காலத்தை மாற்றியமைக்க வேண்டும்.

அதேபோல, மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5,000 ரூபாயை 7,500 ரூபாய் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அண்டை மாநிலமான ஆந்திராவில் நிவாரணத் தொகை ரூபாய் 4,000 ஆக இருந்ததை, தற்போது ரூ.10,000 ஆக வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மீன்பிடித் தொழில் என்பது பல்வேறு நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் இடையே கடலில் சென்று தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இயற்கை சீற்றத்தினாலும், இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதலினாலும் உயிரிழப்புகளையும், உடமை இழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை மீனவர்களுக்கு இருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மனிதாபிமான உணர்வோடு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகையை ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.5,000-லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *