ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை அறிவித்து அதை பிரபலப்படுத்துவதில் மோடி அரசுக்கு இணை யாரும் கிடையாது. ஆனால், இன்றைய தினத்தை மட்டும் பெரிதாக கவனம் செலுத்தாமல் அதிவேகமாகக் கடந்து சென்றுவிடும் முடிவில்தான் இருக்கிறார்கள் மத்திய அரசாங்கத்தினரும் பாஜகவினரும்.
இன்று நவம்பர் 8ஆம் தேதி. இந்தியப் பொருளாதாரத்தை ஆட்டிவைத்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2016 நவம்பர் 8 இரவு 8.15 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றினார். நாட்டுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாகக் கூறினார்.
**சுக்குநூறான முறைசாராப் பொருளாதாரம்**
நவீன வரலாற்றில் எந்தவொரு நாடும் இதுவரை முயற்சி செய்யாத பொருளாதார நடவடிக்கையை அறிவித்தார். ஒரே நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தில் 86 சதவிகிதத்தைப் பெற்றிருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 என்ற இரண்டு உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
இந்தியா உட்பட ஒரு சில நாடுகளும் இதற்கு முன்பு இந்த முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் இது அதுபோல இல்லை. ஒரே இரவில் மக்களிடம் இருந்து பெரும்பான்மை பணத்தை உறிஞ்சியது, மோடியின் அறிவிப்பு உடனடியாக முறையான பணத்துடன் இருந்த பொது மக்களிடையேகூட பீதியைத் தூண்டியது. புதிதாக அறிவிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு, அதுவும் பல்வேறு கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு இடையே தங்கள் பணத்தைப் பெறுவதற்கு மக்கள் ஏடிஎம் வாசலில் காத்துக் கிடந்தனர்.
செல்லுபடியாகும் நாணயங்களுக்கு ஈடாகப் பணத்தைத் திரும்பப் பெறவும், செல்லாத நோட்டுகளை டெபாசிட் செய்யவும் வங்கிகளில் கூட்டம் அலை மோதியது. ‘லிக்யுட் கேஷ்’ எனப்படும் கரன்சித் தாள்களே ஆதிக்கம் செலுத்தும் இந்தியப் பெரு நாட்டின் முறைசாரா பொருளாதாரத்துடைய விநியோக சங்கிலிகளை உடைத்து, சிறு வணிகங்கள் மற்றும் பெரு வணிகங்களை எல்லாம் முடக்கிப் போட்டது பணமதிப்பழிப்பு. இன்று வரை அதிலிருந்து பல நிறுவனங்களால் எழுந்திருக்க முடியவில்லை என்பதே நிஜம்.
இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) அடுத்த வாரங்களில் பணம் / திரும்பப் பெறுதல் மற்றும் வைப்பு தொடர்பான விதிகள் குறித்து 60க்கும் மேற்பட்ட சுற்றறிக்கைகளை வெளியிட்டது. ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் இயல்பான பணப் பரிவர்த்தனைக்குக் குறைந்தது ஐந்து மாதங்களாவது ஆயின.
**இலக்கை அடைந்ததா பணமதிப்பழிப்பு?**
கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த முறை என்று அறிவித்தார் மோடி. ஆனால் கறுப்புப் பணம் ஒழிந்ததா?
வரி ஏமாற்றுக்காரர்கள், வழக்கம்போல், தங்கள் கறுப்புப் பணத்தை வெண்மையாக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். பலர் இந்தத் தொகையைச் சிறிய பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு கணக்குகள் மூலம் டெபாசிட் செய்தனர், தனியார் முதலாளிகள் ஒரு வருடத்திற்கு முன்கூட்டியே சம்பளத்தை தங்கள் ஊழியர்களுக்குப் பணத்திலிருந்து விடுவிப்பதற்காக வழக்குகள் இருந்தன. சிலர் தங்க நகைக்கடைக்காரர்களிடம் தங்கள் பணத்தை உடனடி இருப்புக்களாக மாற்ற விரைந்தனர். ஆக இப்படி 99 சதவிகிதத்திற்கும் அதிகமான பணம் வங்கிகளுக்கே திரும்பிவிட்டது.
தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் பணமதிப்பழிப்பு என்ன அடைந்துள்ளது? பிரதமர் தனது தொலைக்காட்சி உரையில் ஆரம்பத்தில் மூன்று முக்கிய இலக்குகள் அறிவிக்கப்பட்டன.
1) கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துதல்
2) ஊழலை ஒழித்தல்
3) கள்ள நோட்டுகளை ஒழித்தல்
பண பரிமாற்றம் ஆதிக்கம் செலுத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், வரி தளத்தை விரிவுபடுத்துதல் போன்ற பல குறிக்கோள்களும் பின்னர் சேர்க்கப்பட்டன. இந்த இலக்குகள் மூன்று ஆண்டுகளில் அடையப்பட்டுள்ளனவா? இல்லவே இல்லை என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
**இன்றைய மந்த நிலையின் தாய்!**
பிடிஐ நேற்று வெளியிட்டிருக்கும் தகவலின்படி நாடு முழுவதும் எடுக்கப்பட்ட சர்வேயின்படி இப்போதைய நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு, பணமதிப்பழிப்பே காரணம் என்று நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்பின்படி, பணமதிப்பழிப்பு பல அமைப்பு சாரா துறை ஊழியர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகப் பதிலளித்தவர்களில் சுமார் 32 சதவிகிதம் பேர் நம்புகின்றனர்.
பணமதிப்பழிப்பின் விளைவாக வரி வசூல் வட்டத்துக்குள் பலர் வந்துள்ளதாக 42 சதவிகிதம் பேர் கூறினர். அதே நேரத்தில் 25 சதவிகிதம் பேர் இந்த நடவடிக்கையால் எந்த நன்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்தத் தடை பொருளாதாரத்தில் கறுப்புப் பணத்தைக் குறைத்துள்ளதாக, 12 சதவிகிதம் பேர் சொல்ல, நேரடி வரி வசூலை அதிகரித்துள்ளதாகவும் 21 சதவிகிதம் பேர் பதிலளித்தனர்.�,”