பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி… எதற்காக?

Published On:

| By Balaji

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளதற்கான பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மீது எடுத்ததற்கெல்லாம் அபராதம் விதிப்பதுதான் வங்கிகளின் வழக்கம். ஆனால், அப்படிப்பட்ட வங்கிகள் மீது அபராதம் விதித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. அண்மைக் காலமாக இந்திய வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கி நிர்வாகம், கட்டமைப்பு, ஒவ்வொரு வங்கியின் கணக்கு, இயங்கும் முறை, கட்டுப்பாடுகளை முழுமையாக வங்கிகள் கடைப்பிடிக்கிறதா என்று பல்வேறு ஆய்வுகளை அவ்வப்போது செய்து வருகிறது.

இந்த வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கை அளித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்த பதிலின்படி, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு அது இணங்காதது ஆதாரபூர்வமாகத் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் என பாரபட்சம் பார்க்காமல் மொத்தம் 14 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்திருந்தது.

பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பாந்தன் பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கிரெடிட் சுயிஸ், இந்தியன் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், கர்நாடகா பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், ஜம்மூ காஷ்மீர் பேங்க், உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகளுக்கு மொத்தம் ரூ14.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஆர்பிஐ வரலாற்றிலேயே பல்வேறு வங்கிகள் மீது ஒரே நாளில் ரூ.14.50 கோடி அபராதம் விதித்தது அதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகபட்சமாக, பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அபராதமாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.50 லட்சம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share