பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான இரண்டு அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சுகாதாரத் துறைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
திருநெல்வேலி சங்கரன்கோவிலைச் சேர்ந்த டைட்டஸ் ஆதிநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்தார். “தமிழகத்தில் 142 நகராட்சிகளும், 300க்கும் மேற்பட்ட நகர பஞ்சாயத்துகளும் உள்ளன. இவை நகராட்சி சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதும், அதனைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையில் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வதும் முக்கியப் பணிகளாகும். இதை முறைப்படுத்துவதற்காக, பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்து ஆகியவை பராமரித்து வருகின்றன.
இந்நிலையில், பிறப்பு இறப்புப் பதிவுகளை மேற்கொள்வது தொடர்பாக 2017ஆம் ஆண்டில் அரசாணை எண் 353ம், 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் அரசாணை எண் 443ம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியில் நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளரும், மற்றொரு பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் சுகாதார ஆய்வாளர்களும் பிறப்பு, இறப்பு பதிவுகளை மேற்கொள்வர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
“ஒரு எல்லைக்குள் இரு பகுதிகளாகப் பதிவு நடைபெறுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், தகவல்கள் தவறாகப் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். துல்லியமான புள்ளிவிவரங்களைப் பெறுவது என்பதும், சுகாதாரத்தை அளவிடுவது என்பதும் இயலாததாகிவிடும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான 2 அரசாணைகளை ரத்து செய்யவும், அதுவரை அவற்றைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கவும் அம்மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த மனுவை, இன்று (நவம்பர் 1) விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. இது குறித்து சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,