rஇடைத் தேர்தல்: அதிமுகவுடன் உரசும் தேமுதிக!

Published On:

| By Balaji

விஜயகாந்திடம் அதிமுக பேசிய பிறகுதான் இடைத் தேர்தல் குறித்த முடிவை அறிவிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் கடந்த இரண்டு நாட்களாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை நடைபெறவுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வேட்பாளர்கள் முடிவுசெய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளன. மற்ற கட்சிகள் இதுவரை மவுனம் காத்து வருகின்றன. பாஜக மத்திய தலைமையிடம் ஆலோசித்த பிறகு இடைத் தேர்தல் குறித்த தங்களது முடிவை அறிவிப்போம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், அதில் தனக்கு பயம் ஏதுமில்லை என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று முன்தினம் ஊடகத்தினரிடம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுகிறதா? இடைத் தேர்தலில் தனித்து களம் காண்கிறதா என்றெல்லாம் யூகங்கள் எழுந்தன.

இந்த நிலையில் திருப்பூரில் நேற்று (செப்டம்பர் 24) செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம், இடைத் தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே கூட்டணியில் இருக்கிறோம். இடைத் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேசிதான் முடிவெடுக்க முடியும். இனி அதிமுகவினர் வந்து விஜயகாந்திடம் பேச வேண்டும். இதெல்லாம் இருக்கிறது. ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால், அதிமுகவினர் வந்து பேசிய பிறகுதான் எங்களுடைய முடிவை அறிவிக்க முடியும்” என்று பதிலளித்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share