bராமதாஸை டென்ஷனாக்கும் ஜெகத்ரட்சகன்

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று (அக்டோபர் 14) பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி எம்.பியும், நாளை (அக்டோபர் 15) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

முதலில் ராமதாஸ் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வதாகவே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அவரது பிரச்சார சுற்றுப் பயணம் சுருக்கமாகவே இருந்தது. இடைத்தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்யும் திட்டமும் முதலில் இல்லை என்கிறார்கள் தைலாபுரத்து வட்டாரத்தில். ஆனால் வன்னியர்களுக்கு திமுக என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறது அக்டோபர் 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, தொகுதியில் இருக்கும் பாமக வன்னியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக நடந்த அறிக்கைப் போரில் கடலூர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை எதிர்த்து பாமக துணைப் பொதுச் செயலாளர் பழ. தாமரைக் கண்ணன் தைலாபுரம் உத்தரவின் பேரில் அறிக்கை, பேட்டி கொடுத்தார்.

ஆனால் சில மணி நேரங்களில் தான் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் தாமரைக் கண்ணன். இதனால் அதிர்ந்து போன ராமதாஸ், பாமகவின் நிர்வாகிகளை சந்திப்பதற்காக தானே களத்தில் இறங்க முடிவு செய்து பிரச்சாரத்தை அறிவித்தார்.

இதற்கிடையில் அன்புமணியும், ராமதாஸும் பிரச்சாரம் செய்யும் இடங்கள் உட்பட விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் அடர்த்தி மிக்க பல்வேறு பகுதிகளில், வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டு போராட்டத் தியாகிகளுக்கு மணிமண்டபம், அய்யா ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 3 கோடி வன்னியர்களின் நன்றி என்று அறிவிக்கும் திடீர் போஸ்டர்கள் சில நாட்களாகவே ஓட்டப்பட்டிருக்கின்றன.

ஸ்டாலினை அடுத்து பெரிய சைசில் ஜெகத்ரட்சகன் படம் போடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் வீர வன்னியர் பேரவை என்ற பெயரில் ஒட்டப்பட்டிருக்கின்றன. வீர வன்னியர் பேரவை என்பது 2001 ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன் தொடங்கி நடத்திய அமைப்பு. துரைமுருகனின் வற்புறுத்தலின் பேரில் ஜெகத்ரட்சகன் திமுகவுக்கு வந்தபிறகு , வீரவன்னியர் பேரவை பெரிதாக செயல்படவில்லை.

இந்நிலையில் இப்போது திடீரென ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீர வன்னியர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதில் ஜெகத்ரட்சகன் படமும் பெரிய அளவில் இடம்பெற்றிருப்பதைப் பார்த்த திமுக நிர்வாகிகள், “டாக்டர் ராமதாஸ் விக்கிரவாண்டி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது அவரை டென்ஷன் ஆக்குவதற்காக ஜெகத் அண்ணன் செய்த ஏற்பாடுதான் இது” என்கிறார்கள். வீரவன்னியர் பேரவை மட்டுமல்ல, வன்னியர் குல க்ஷத்திரியர் சங்கம் என்ற அமைப்பின் பெயரிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share