ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 7) வழங்கினார்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வேண்டுமானால், 39 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 10 கோடி ரூபாயைத் தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு வழங்கியது. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் ஆன நிதியை வழங்கி வருகின்றனர். தமிழ் ஆர்வலர்கள் மூலம் ரூ.82 லட்சம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மொத்தம் ரூ.36 கோடி திரட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்ததுடன் மற்ற கட்சிகளும் நிதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், தமிழ் இருக்கைக்காக திமுக சார்பில் ரூ 1 கோடிக்கான காசோலையை அதற்காக அமைக்கப்பட்ட குழு உறுப்பினர் ஆறுமுக முருகையாவிடன் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
மேலும், “தேமதுர தமிழுக்கு இருக்கை கிடைக்கப் பெறும் அந்த நாள் தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் இன்பத் தேன் வந்து பாயும் நாள் என்பதோடு, விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைய வேண்டும்” எனத் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.�,