சரக்கு மற்றும் சேவை வரியின் பயன்களைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்காத மூன்று நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிக வரி விகிதங்களைக் கொண்டிருப்பதாக எழுந்த புகார்களையடுத்து பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. ஆனால் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டாலும் அதன் பயனை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் சில நிறுவனங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை மற்றும் கட்டணங்களைக் குறைக்காமலேயே விற்பனை செய்து வருகின்றன. அப்படிப்பட்ட மூன்று நிறுவனங்கள் மீது மேற்கொண்ட சோதனையில் ஜிஎஸ்டியின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காததைக் கண்டித்து மத்திய நிதியமைச்சகம் சார்பாக நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்டுகேஸ்டில் ரெஸ்டாரண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (மெக்டொனால்ட்ஸ்), ஷர்மா டிரேடிங் லிமிடெட் மற்றும் லைஃப்ஸ்டைல் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் 2016-17ஆம் ஆண்டுக்கான தங்களது பேலன்ஸ் ஷீட், வருவாய் விவரம், இழப்புகள், ஜூலை – டிசம்பர் மாதங்களுக்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் விவரங்கள் மற்றும் இதர ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்ட பிறகு அதன் பயன்களை இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கினவா என்பதையும் ஜனவரி 12ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோல அளவுக்கு அதிகமாக வருவாய் குவிக்கும் நிறுவனங்களுக்கு எதிராகச் சுமார் 169 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சரான சிவ் பிரதப் சுக்லா கூறுகிறார்.�,