உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிட்டுள்ளது இந்திய ரயில்வே.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுவது குறித்து பல குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. குறிப்பாக ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் அதிகமான வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது அதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ”2018 ஆண்டு ரயில்வே வாரியம் உதவி ரயில் ஓட்டுனர் மற்றும் டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எந்த ரயில்வேக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்கு தான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேறு ரயில்வேக்கு அவர்கள் நியமிக்கப்பட கூடாது. ஆனால் உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவானதாகும். அதுமட்டுமல்ல இதர ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமாகும். ஏற்கனவே டெக்னீசியன் கேட்டகரியில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60 சவிகிதம் பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள். இந்த உதவி ஓட்டுநர் பதவிக்கு 13 சவிகிதம் பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள். இது ரயில்வே அமைச்சர் எனக்கு கொடுத்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து கோரக்பூர் ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பது தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதாகவும் இருக்கிறது. ரயில்வே அமைச்சர் உடனடியாக தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூருக்கு திருப்பி அனுப்பவும், தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பவும் கோரிக்கை விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில்தான் தமிழ்நாடு அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தமிழ் மொழியில் தகுதித் தேர்வு முதலில் நடத்தவும், அந்த தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே பொது விடைத்தாள்களை தொடர்ந்து திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
**-வினிதா**
�,