�
மின்வாரிய கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதை கண்டித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லம் அருகே 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
”மின்கம்பம், மின்கம்பிகள் அமைக்கும் வேலைக்கான கேங்மேன் பணிகளுக்கு 15,000 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 10,000 பேருக்கு பணி வழங்கப்பட்டது. இவர்கள் அனைவருமே ஐடி, டிப்ளோமா முடித்தவர்கள். ஆனால், 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களை புறக்கணித்துவிட்டு புதியவர்களுக்கு பணிநியமனம் கொடுத்ததுதான் பிரச்சனைக்கு காரணம். அமைச்சர் சொன்னால்தான் மீதமுள்ள இடங்களில் ஒப்பந்த பணியாளர்களை நிரப்ப முடியும் என்று அதிகாரி கூறிவிட்டார். அதனால், மீதமுள்ள 5,000 பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் இல்லம் அருகே முற்றுகையிட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களை அங்கிருந்து அனுப்புவதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.
*-வினிதா*
�,