சத்குரு: பொதுவாக, செழிப்பு என்பது எண்ணெய், தங்கம் அல்லது வைரங்களை ஈட்டுவது என்று நினைக்கிறோம். ஆனால், அடுத்த தலைமுறை வளமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் – பங்குச் சந்தை அல்லது வங்கி இருப்பின் அடிப்படையில் அல்ல, அவர்களது துடிப்பான வாழ்க்கைக்கு அடிப்படை – முக்கியம் சுத்தமான காற்று, சுத்தமான நீர் மற்றும் சத்தான உணவு. இவை அனைத்தும் சாத்தியமாக மண்ணில் வளம் இருக்க வேண்டும்.
மண் மற்றும் மனித நலன் மீதான நமது அக்கறை தனித்தனியான விஷயங்கள் அல்ல, இவை இரண்டும் ஒன்றுதான். உலகெங்கிலும் சராசரியாக 39 அங்குலங்கள் உள்ள மேல் மண், நம்மையும் சேர்த்து இந்த கிரகத்தில் உள்ள 87 சதவிகித உயிர்களுக்கு அடிப்படையாகும். தாவரங்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் புழுக்கள் – அனைத்தும் மேல் மண்ணின் வளத்தால் செழித்து வளர்கின்றன.
மண்ணில் நடக்கும் வாழ்க்கைச் செயல்பாட்டின் விளைவுதான் நம் வாழ்வின் நிலை. ஒரு சில வகையான மண்ணில் 500 முதல் 700 கோடி உயிரினங்கள் உள்ளன. அந்த நுண்ணுயிர்களின் வாழ்வில் இருந்துதான் மற்ற அனைத்து உயிர்களும் இந்த கிரகத்தில் உருவாகியுள்ளன. அவையே வாழ்வின் முதல் வடிவங்கள், அவர்களால்தான் நாம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போதும் கூட, மண்ணில் நடப்பதற்கும், மனித உடலின் உயிரியல் அமைப்பில் நடப்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் இல்லை. நீங்கள் தனிப்பட்ட செல்களை எடுத்துக்கொண்டால், உங்கள் உடலில் 60 சதவிகிதம் நுண்ணுயிர்கள், மீதமுள்ள 40 சதவிகிதம் மட்டுமே உங்கள் பெற்றோரின் மரபணு தாக்கம் கொண்ட செல்கள். எனவே, இது மண்ணிலிருந்து வேறுபட்டதல்ல. மண்ணில் உள்ள செழுமையும் மனித வாழ்வில் உள்ள செழுமையும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
**வாழ்வின் மரணம்**
ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் நடந்துள்ள மண்ணின் சீரழிவின் அளவு பயத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் உதாரணமாக, பூச்சிகளின் உயிர்ப்பொருள் சுமார் 80 சதவிகிதம் குறைந்துள்ளது – இது உண்மையில் வாழ்க்கையின் மரணம். “சரி, பூச்சிகள் இறந்தால் நமக்கு என்ன பிரச்சனை? எப்படியும் நமக்கு பூச்சிகள் பிடிக்காது!” இதுதான் நகர்ப்புற மக்களின் மனநிலை. நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நாளை அனைத்து பூச்சிகளும் இறந்தால், இரண்டரை முதல் நாலரை ஆண்டுகளில், இந்தக் கிரகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் அழிந்துவிடும். அனைத்து புழுக்களும் இறந்துவிட்டால், உங்களுக்கு தோராயமாக 18 முதல் 30 மாதங்கள் ஆகும். இன்று அனைத்து நுண்ணுயிரிகளும் இறந்தால், நாளையே எல்லாம் முடிந்துவிடும். மண்ணில் நுண்ணுயிர் இல்லை என்று வைத்துக்கொள்வோம், மரங்கள் வாழாது, பயிர்கள் எதுவும் வளராது. அனைத்து நுண்ணுயிரிகளும் இறந்துவிட்டால் – நம் கதை முடிந்தது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 27,000 நுண்ணுயிரி இனங்கள் அழிந்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், போதுமான அறிவியல் தரவுகளுடன், இந்த கிரகத்தில் இன்னும் 80 முதல் 100 அறுவடை செய்வதற்கு மட்டுமே விவசாய மண் உள்ளது என்று கூறுகிறது. அதாவது 45 முதல் 60 வருடங்களில் நாம் மண்வளத்தை முற்றிலும் இழந்துவிடுவோம். அது நடந்தால், பூமியில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும்.
**முதல் படி**
மண் வளத்தை மீட்க வேண்டுமானால், உலகில் மாற வேண்டிய முதல் மற்றும் முதன்மையான கதை அது உயிருள்ள மண், இறந்த பொருள் அல்ல. விவசாய விஞ்ஞானிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விவசாயத் துறைகள் கூட இன்னும் மண்ணை ஒரு பொருளாகக் கருதுகின்றன. இன்னும் கொஞ்சம் நைட்ரஜன், கொஞ்சம் பொட்டாசியம், கொஞ்சம் பாஸ்பரஸ் தேவை என்பதுதான் அவர்களின் அணுகுமுறை. இல்லை, மண்ணுக்கு அது தேவையில்லை, மண்ணுக்குத் தேவை உயிரினங்கள்.
பல்லுயிர் பெருக்கத்தை நாம் திரும்பப் பெற விரும்பினால், மிக முக்கியமான விஷயம் வளமான மண்ணைக் கொண்டிருக்க வேண்டும். வளமான மண், முக்கியமாக, அதிக கரிமப் பொருட்கள் தொடர்ந்து மண்ணுக்குள் செல்வதன் விளைவாகும். நீங்கள் என்ன செய்தாலும், கரிம உள்ளடக்கத்தை மீண்டும் மண்ணில் வைக்க இரண்டு வழிகள் உள்ளன – தாவரங்களிலிருந்து பச்சை குப்பைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள். இந்த இரண்டு பொருட்களும் கிடைக்க வேண்டும்.
மண்ணைப் பற்றி நாம் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது, சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. இப்போது துவங்கினால், 15 முதல் 25 ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்படும். ஆனால் நாம் இன்னும் 25 முதல் 50 ஆண்டுகள் வரை காத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், பின்னர் அதை மாற்ற முயற்சி செய்யும்போது, அது திரும்ப 200 ஆண்டுகள் ஆகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மேலும் அந்தக் காலகட்டம் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தப் போகிறது.
மண்ணைப் பேணுதல், மண் வளம் சீர்குலைவு ஏற்படாமல், பாலைவனமாகாமல் பார்த்துக்கொள்வது, ஒரு தலைமுறை மக்களாகிய நமக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்பு. இந்த ஒரு விஷயத்தை ஒவ்வொரு குடிமகனும், இந்த கிரகத்தில் உள்ள பல நாடுகளின் ஒவ்வொரு அரசாங்கமும் ஒரு வெளிப்படையான பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மண்ணின் வளத்தை உறுதி செய்யாமல், ஒரு விதத்தில் உயிரை விட்டுக்கொடுக்கிறோம். தயவுசெய்து, அதை நிகழச் செய்வோம்.
விளம்பர பகுதி
.
.