க்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவிகாந்த் சந்தன், காசி விஸ்வநாதர் கோயில் குறித்த தனது கருத்துகளால் சர்ச்சையைக் கிளப்பினார். இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, நேற்று (மே 18) வளாகத்தில் மாணவர் ஒருவரால் அந்தப் பேராசிரியர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மதியம் 1 மணியளவில் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஹிந்தித் துறை பேராசிரியர் ரவிகாந்த் சந்தன் கூறுகையில், “கார்த்திக் பாண்டே என்ற மாணவர் தலைவர் என்னிடம் வந்து, என்னை அவதூறாகவும், என் சாதியை அவதூறாகவும் திட்டித் தாக்கினார்” என்று கூறினார். இரு காவலர்கள் மாணவரை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
மேலும், “இந்தச் சம்பவம் தொடர்பாக நான் போலீஸில் புகார் அளித்துள்ளேன். எனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது” என்று பேராசிரியர் கூறினார்.
மாணவர் கார்த்திக் பாண்டே, சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அமைப்பான சமாஜ்வாதி சத்ர சபாவின் அதிகாரி. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து லக்னோ பல்கலைக்கழகம் செய்தித் தொடர்பாளர் துர்கேஷ் ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், “பேராசிரியரை தாக்கியதற்காக கார்த்திக் பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஏபிவிபியின் (அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்) புகாரின் அடிப்படையில் மற்ற குற்றச்சாட்டுகளுடன் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பேராசிரியருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், ஞானவாபி வளாகம் தொடர்பாக ஆன்லைன் வலைதளத்தில் நடந்த விவாதத்தின்போது அந்தப் பேராசிரியர் ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
.