�தமிழ்நாட்டில் இறாலைப் பெரும்பாலும் வறுத்து தொக்கு போல் செய்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இறால் குழம்பு மற்றும் இறால் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. அத்தகைய இறாலில் அனைவருக்கும் பிடித்த கோல்டன் ஃப்ரை செய்தும் அசத்தலாம்.
**என்ன தேவை?**
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்தது)
கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)
உப்பு, பிரெட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
ஒரு பவுலில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கவும். இறாலைச் சுத்தம் செய்து கார்ன்ஃப்ளார் கலவையில் புரட்டி, கால் மணி நேரம் ஊற விடவும். பிறகு ஊறிய இறாலை ஒவ்வொன்றாக எடுத்து பிரெட் தூளில் புரட்டி வைக்கவும். அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், இறாலைச் சேர்த்துப் பொரித்தெடுத்தால், இறால் கோல்டன் ஃப்ரை ரெடி.
**குறிப்பு**
இறாலைப் பொரிக்கும்போது எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். இறால் பொன்னிறமாக வரும்வரை, கரண்டியால் புரட்டி விட்டு நிதானமாகப் பொரிக்கவும்.�,