பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது. தொடர்ந்து, விலை உயர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ ஊரடங்கு துவங்கும் போது 72.28 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று (நேற்று-ஜூன் 11) 77.96 ரூபாய்க்கும்; 65.71 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 70.64 ரூபாய்க்கும் விற்கப்படுவது, வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை – எளிய, நடுத்தர மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வு, மத்திய அரசின் தொடர் விலையேற்றம் என்ற இருமுனை தாக்குதலால் சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 5.68 ரூபாயாகவும், டீசல் விலை 4.93 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
தினம் ஒரு தகவல்” போல் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசு – ஒருபுறம் ‘ஊரடங்கு’ தளர்வு என அறிவித்து விட்டு, இன்னொரு புறம் ‘பெட்ரோல் டீசல் கட்டண உயர்வு’ என்று மக்களை வஞ்சித்து வருவது வேதனையளிக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்த காலங்களில் அனைத்துப் பயன்களையும் அள்ளி எடுத்துக் கொண்ட மத்திய பாஜக அரசு – ‘விலை உயர்வை’ மட்டும் மக்களின் தலையில் தூக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்?
எனவே, விலைவாசி உயர்வுக்கும், பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும், பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.78.47ஆகவும், டீசல் 50 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.71.14ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,”