uபெட்ரோலில் எத்தனால்: பிரதமர் மோடி விளக்கம்!

Published On:

| By Balaji

பெட்ரோல் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு நடுத்தரக் குடும்பத்தினர் குறித்து யோசித்து, பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் முக்கிய திட்டங்களுக்கு நேற்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, இரண்டு திட்டங்களை நாட்டுக்கு மோடி அர்ப்பணித்தார். ராமநாதபுரம் – தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் சென்னை மணலியில் சி.பி.சி.எல் (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) வளாகத்தில் கேசோலினில் இருந்து கந்தகத்தை நீக்கும் வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத, பசுமை வழி ஆதாரங்களின் அடிப்படையிலான எரிசக்தி திட்டங்களை உருவாக்கி, எரிசக்திக்காகப் பிற நாடுகளை நம்பி இருக்கும் நிலையை குறைக்க வேண்டியது நமது கூட்டுக் கடமையாக உள்ளது என்று கூறினார்.

மேலும், இறக்குமதியை நாம் ஏன் அதிக அளவில் நம்பியுள்ளோம்? நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், முந்தைய அரசு இந்த விவகாரம் குறித்துக் கவனம் செலுத்தி இருந்தால், நடுத்தர வர்க்கத்தினர் யாரும் அவதிப்பட்டிருக்க மாட்டார்கள். எங்கள் அரசு நடுத்தர மக்களின் கவலைகள் குறித்து அக்கறை கொண்டிருக்கிறது. அதனால்தான் பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

‘ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு’ திட்டம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ஐந்தாண்டுக் காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. நகர எரிவாயு இணைப்பு கட்டமைப்பில் 407 மாவட்டங்களைச் சேர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலப்பதால் டேங்கிற்குள் தண்ணீர் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share