பொங்கல் பானை: டிராக்டரில் மண் எடுக்க அனுமதி வேண்டும்!

Published On:

| By Balaji

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மண்ணை தலை சுமையாகவே கொண்டுவர வேண்டியுள்ளது. இதனால் மண் பாத்திரங்கள் செய்ய கூடுதல் கால விரயம் ஏற்படுகிறது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள் தயாரிக்க டிராக்டர்கள் மூலம் மண் எடுத்து வர அனுமதிக்க வேண்டும் என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பெரும்பாலான கிராமங்களில் இன்றும் மண் பானைகளிலேயே பொங்கல் வைக்கும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு பானை, சட்டி உள்ளிட்ட பாத்திரங்களைத் தயாரிக்கும் பணிகளில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு மண் பாத்திரங்களின் தேவை அதிகமாக உள்ளதால், கூடுதல் மண் எடுத்து வந்து மண்பாண்டங்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக தேவைப்படும் கூடுதல் மண்ணை டிராக்டர்களில் எடுத்து வர அரசு தடை விதித்துள்ளது. மண் பாத்திரங்கள் செய்வதற்கு ஏற்ற வண்டல் கலந்த களிமண் ஆற்றங்கரைகளில்தான் கிடைக்கிறது. தற்போது மண்ணை டிராக்டர்களில் எடுத்து வர தடை உள்ளதால், தொழிலாளிகள் தலை சுமையாகவே கொண்டுவர வேண்டியுள்ளது. இதனால் மண் பாத்திரங்கள் செய்ய கூடுதல் கால விரயம் ஏற்படுகிறது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள் தயாரிக்க டிராக்டர்கள் மூலம் மண் எடுத்து வர அனுமதிக்க வேண்டும்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மண்பாண்டம் செய்யும் தொழில் நடைபெற இயலாது என்பதால், அரசு மானிய தொகையை அறிவித்து வழங்கி வருகிறது. இந்த மானியம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திலேயே வழங்கப்படுகிறது. இந்த தாமதத்தை தவிர்த்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் மானிய தொகை வழங்க வேண்டும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்ததால் 3,000 தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த கூடுதல் மானியத்தை வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share