�
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐநா சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்துகொண்டு கொரோனாவால் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை குறித்து பேசினார்.
“கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது அல்லது இல்லை. சுகாதார பராமரிப்பும் இல்லை. அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பும் இல்லை” எனக் கூறினார்.
மேலும், “உலகம் 5 முதல் 6 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும்கூட, வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவிகித அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. ஆனால் குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகள், சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவிகிதம்தான் முதலீட்டுக்காக ஒதுக்க முடிகிறது” என்றும் கூறியுள்ளார்.
**-ராஜ்**
.
�,