தேவையான பொருட்களுடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி பொடிமாஸ் செய்வது பலரின் இயல்பு. இந்த பொடிமாஸ் வகைகளைத்தான் புர்ஜி என்பார்கள். இந்த புர்ஜி வகைகள் சப்பாத்தி, பரோட்டோ, பூரி போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ள உதவும். இதே புர்ஜியை சாதத்துக்கும் தொட்டுக்கொள்ள செய்யலாம். அதற்கு இந்த பனீர் – குடமிளகாய் புர்ஜி உதவும்.
என்ன தேவை?
பனீர் – 100 கிராம்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வீட்டில் செய்த பனீராக இருந்தால் விரல்களால் நன்கு பிசையவும். கடையில் வாங்கிய பனீராக இருந்தால் வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்துத் துருவவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு பனீர், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.