தைப்பூசத் திருவிழா தொடக்கம்; சிறப்பு பஸ்கள் இயக்கம்!

Published On:

| By Balaji

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று (ஜனவரி 22) காலை தொடங்கி, வருகிற 31ஆம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 25ஆம் தேதி முதல் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பழநி முருகன் கோயில் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தத் திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பழநி முருகன் கோயிலில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவில்லை. மாறாக ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. பழநி முருகன் கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை ஏழு மணிக்குக் கொடியேற்றம் நடைபெற்றது.

தைப்பூசக் கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வரும் 27ஆம் தேதியும், தேரோட்டம் 28ஆம் தேதியும் நடைபெறுகிறது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி தினமும் நடைபெறுகிறது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி பக்தர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும், அவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தைப்பூசத் திருவிழாவையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வருகின்றனர். குறிப்பாக காரைக்குடி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மாலை அணிந்து கோயிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காக உணவருந்தி விட்டு ஓய்வெடுக்க இலவச தங்குமிடங்கள், மருத்துவ முகாம்கள், வெளிச்சத்துக்காக பாதையோரம் மின்விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரத்தில் விபத்தைத் தடுக்க பக்தர்களுக்கு போலீஸ் துறை சார்பில் ஒளிரும் பட்டைகள் வழங்கப்படுகின்றன.

தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுக்கு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் முன்பதிவு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதார் அட்டை மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் வருகிற 28ஆம்தேதி நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பழநிக்கு பக்தர்கள் வருகை தருவார்கள்.

இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் வருகிற 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து பழநிக்கும், பழநியில் இருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்தத் தகவலை, மதுரை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share