தான் பிரதமர் மோடி போல அல்ல, சாதாரண மனிதன்தான். நாங்கள் தவறு செய்வது இயல்பு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 4ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் விலைவாசி உயர்வு குறித்த பதிவொன்றை இடுகையிட்டிருந்தார். அதில், காஸ் சிலிண்டர், தக்காளி, வெங்காயம், பால், டீசல், பருப்பு உள்ளிட்டவற்றின் விலை கடந்த 2014ஆம் ஆண்டு இருந்ததையும், தற்போது அது எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதையும் விளக்கியிருந்தார். பிரதமர் மோடியின் அரசு ஏழை எளிய மக்களுக்காக பணியாற்றவில்லை என்றும், பணக்காரர்களுக்கான அரசாக உள்ளது என்றும் அதில் ராகுல் குற்றம் சாட்டியிருந்தார்.
ராகுல் வெளியிட்டிருந்த பதிவில், 2014ஆம் ஆண்டு கிலோ 45 ரூபாய் விற்ற பருப்பின் விலை, தற்போது 80 ரூபாயாக உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார். அதன் விலையேற்றம் 77 சதவிகிதமாகும். ஆனால் ராகுலின் பதிவில் அது 177 சதவிகிதம் என்று முரணாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோலவே ஒவ்வொரு பொருளுக்கும் 100 சதவிகிதம் அதிகமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டு சரிசெய்யப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிய பாஜகவினர் ராகுலின் புள்ளிவிவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ராகுல் இன்று ( டிசம்பர் 6) தனது ட்விட்டர் பதிவில், ” நான் ஒன்றும் மோடி அல்ல, சாதாரண மனிதன்தான். நாங்கள் தவறு செய்வது இயல்பு. தவறுகள்தான் வாழ்க்கையை சுவாரசியப்படுத்தும், எனவே தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி, இது என்னை வருங்காலங்களில் மேம்படுத்திக்கொள்ள உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஓன்று, இரண்டு மூன்று என வரிசையாக கேள்விகளை எழுப்பி வருகிறார். ராகுல் காந்தியின் ஏழாவது கேள்வியில்தான் இவ்வாறான குழப்பம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,”